ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆவதையோ, அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை. அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்தத் தேர்தலைப் புறக்கணித்திருந்தார்கள். தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளை தமிழ் மக்கள் இப்போதும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் ரணில் அரசுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.
- இப்படித் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதியுமு் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச.
தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். மஹிந்த அரசை கொலைகார அரசு என்றும் சாடியிருந்தார். இதுதொடர்பில் வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் இலங்கை செய்தியாளர் மஹிந்தவின் கருத்தை கேட்டிருந்தார்.அவருக்குப் பதிலளிக்கையிலேயே மஹிந்த மேற்கண்டவாறு தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தொடர்ந்து கூறிய கருத்துக்கள் வருமாறு
ரணில் அரசை இனியும் நம்பி ஏமாறுவதற்கு தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. நான்கு ஆண்டுகளில் தீர்வுத் திட்டம் தொடர்பில் எதனையும் செய்து முடிக்காத இந்த ரணில் அரசா அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இனி வழங்கப் போகின்றது? சாக்குப் போக்குக்கு புதிய அரசமைப்பு வரைவை சமர்ப்பித்து விட்டு குற்றங்களை எம்மீது சுமத்துவதில் எந்தப் பயனும் இல்லை.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை. அவருடைய வேண்டுகோளுக்கு அமைவாக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்தத் தேர்தலைப் புறக்கணித்திருந்தார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளை தமிழ் மக்கள் இப்போதும் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்றால், ரணில் அரசுக்கு எதிராகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிக்கவேண்டும். அதற்காக 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலைப் போன்று புறக்கணிக்க வேண்டும் என்று கோரவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
போரின் போது உயிரிழப்புக்கள் நடப்பது வழமை. அதற்காக எம்மை கொலைகார அரசு என்ற குற்றம் சுமத்தி அரசு பரப்புரை செய்து வருகின்றது. ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற மாபெரும் மனிதப் படுகொலை யாருடைய ஆட்சியில் இடம்பெற்றது என்பதை ரணில் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளர் வெற்றியீட்டி ஆட்சிக்கு வந்ததும் அடுத்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது தலைமையிலான ஆட்சி அமைந்ததும் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைத்து அதேவேளை, தமிழ் மக்களின் சிவில் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சு நடத்தி தீர்வுத் திட்டத்தை தயாரிப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதுடன் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகும். நாடாளுமன்ற தேர்தலில் எமது அரசு அமைந்ததும் அந்தப் பணி முடிவடையும். தீர்வுத் திட்டத்தை, தமிழ் மக்களுடன் கலந்துரையாடியே தயாரிப்போம். அலரிமாளிகைக்குள் தனிஅறைக்குள் இரகசியமாக தீர்வுத் திட்டத்தை தயாரிக்கமாட்டோம் - என்றார்.